திங்கள், 3 அக்டோபர், 2016

நஞ்சு முறிக்கும் அவுரி

நீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை.

“உரிய லவுரித் துழைத்தான் ஒதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி

என அவுரியைப் பற்றி சொல்கிறது அகத்தியர் குணவாகடம்.

¨    பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது அவுரி. இதன் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும்.

¨    அவுரி இலை குடிநீரைத் தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழியும்.

¨    அவுரிக்கு மலத்தை இளகச் செய்யும் ஆற்றல் உள்ளதால், மலச்சிக்கல் போக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அவுரி குடிநீர் அருந்தி வந்தால், மாலைக்கண் நோய் நீங்கும்.

¨    பாம்புக்கடிக்கு முதலுதவியாக அவுரி இலையைப் பச்சையாக அரைத்து, கொட்டை பாக்கு அளவுக்கு பாம்பு கடிபட்ட நபரை உட்கொள்ளச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

¨    அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகை நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு உருண்டை செய்து மூன்று முதல் அய்ந்து நாள்கள் வரை நாள்தோறும் காலை, மாலை ஓர் உருண்டை சாப்பிட்டு, உப்பில்லா பத்தியத்தைக் கடைப்பிடித்தால், நரம்புச் சிலந்தி நோய் குணமாகும். இதனுடன், இந்த மருந்து உருண்டையை நரம்பு சிலந்தி நோய் இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுப்போட்டாலும் குணம் கிடைக்கும்.

¨    ஒரு கைப்பிடி அவுரி இலையை எடுத்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து, 400 மி.லி. தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து 200 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி, தினமும் இருவேளை என ஒரு வாரம் குடித்துவர, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

¨    அவுரி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து அதனைச் சுமார் 200 மி.லி. காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் மூன்று நாட்கள் குடித்துவர, மஞ்சள் காமாலை குணமாகும்.

¨    அவுரி வேரையும், யானை நெருஞ்சில் இலைகளையும் சம எடை எடுத்து, அரைத்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு மோரில் கலந்து காலைதோறும் 10 நாள்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.ஸீ

-உண்மை,1-16.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக