ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆவாரையின் அரிய பயன்கள்!



“ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?’’ என்று பழமொழி உண்டு.  ஆவாரம் பூவைப் புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி (பொடியாக்கிக் கொள்ளலாம்) தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பதே அப்பழமொழியின் உட்பொருள்.

ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆவாரையின் தாவரவியல் பெயர் ‘‘Cassia Auriculata’. குத்துச்செடி இனத்தைச் சேர்ந்த ஆவாரை, சுமார் 10 அடி உயரம் வரை வளரும். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஆவாரை, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்குப் பயன்படக்கூடியவை. ஆனாலும்  பூவுக்கு மருத்துவக் குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை எனப் பல உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

உடற்சோர்வு நீங்க:

மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டுக் கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில் கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரைச் சூடான பாலில் கலந்து 48 நாள்கள் குடித்து வந்தால் நோய் அனைத்தும் நீங்கிப் புதுத்தெம்பு கிடைக்கும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இதேபோல் ஆவாரம்பூ பொடியைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை எனத் தொடர்ந்து அருந்தி வந்தால்  சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ அல்லது அதன் பொடியைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் பால் சேர்த்துக் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களைக் கறிக்கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

தோல் நோய் விலக:

பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம் பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

எலும்பு இணைய:

ஆவாரையின் இலைகள் தரும் பலன்களும் அதிகம். பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்துத் தயிர் அல்லது நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கரு அல்லது பொடியாக்கிய கறுப்பு உளுந்து சேர்த்துத் தசை பிசகுதல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். விலகிய மூட்டினைச் சரி செய்து அதன்மீது பற்றுப்போட வேண்டியது அவசியம்.

பல் நோய் அகல:

ஆவாரம் பட்டையை நன்றாகக் காய வைத்து இடித்துப் பொடியாக்கிச் சலித்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து ஒரு டம்ளராக வற்றுமளவுக் கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி இளஞ்சூட்டுடன் வாய் கொப்புளித்து வந்தால் பல் இறுகிக் கெட்டிப்படும். அத்துடன் இதைச் செய்வதால் ஆடிக்கொண்டிருந்த பற்கள் பலப்படும். சொத்தை விழுந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால் இந்த நீரால் வாய் கொப்புளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன் பற்களுக்கும்  பாதுகாப்பு கிடைக்கும்.
- உண்மை இதழ், 1-15.10.17

செவ்வாய், 19 டிசம்பர், 2017

ரத்த சோகைக்கு நெல்லிக்காய்



தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும் - அது ஆப்பிளுக்கு நிகரான சத்துக் களைக்கொண்டது. அதாவது ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள் களுக்குச் சமம்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர் வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளிப் பிரச்சினையை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக் கிறார்கள். உண்மையில் சளிப் பிரச்சினை வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய் களையும் கட்டுப்படுத்தும்.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக  அதிகம்.  ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

பச்சைக் காயாகச் சாப்பிடும் போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது  சாப்பிடலாம்.  நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

- விடுதலை நாளேடு,18.12.17

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!


வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம். இரத்தத்தில் கலந் துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இத னால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.  இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு  சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.  மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக  வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப்  போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.  வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில்  ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல்  தடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

-விடுதலை நாளேடு,18.12.17

திங்கள், 11 டிசம்பர், 2017

ஏலக்காயின் பயன்கள்




வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்சினைகள் தீரும்.

ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினிகள் வாய்ப் புண் போன்ற வாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய பல வழிகளில் முயற்சித்து ஓய்ந்து போய்விட்டீர்களா, கவலையே வேண்டாம் இந்த ஏலக்காய் தண்ணீர் துர்நாற்றத்தை நீக்குவதோடு உங்களது வாயை மணக்க வைக்கும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறுகள் சரியாகும், ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அதுவே ஏலக்காய் கொதிக்க வைத்த தண்ணீரை நீங்கள் குடிப்பதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் செரிமான திறன் அதிகரிக்கும் என்பது உறுதி.

சுவாசம் மற்றும் மூச்சுக் குழாய் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல சிகிச்சை முறையாகும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ள வர்கள் தினமும் இந்த நீரைக் குடிப்பதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏலக்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் ரத்த சோகை மற்றும் அது தொடர்பான பிற கோளாறு களை சரி செய்யும்.

இவற்றைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சரி செய்வது என இன்னும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் தண்ணீரின் மூலம் நாம் பெறலாம்.

பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கத் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். வெறும் தண்ணீரை குடிப்பதை விட அதில் இவ்வாறு ஏலக்காய்  சேர்த்து குடிப்பது அதிக பலனை தரக்கூடும் என்பதை நினைவில்  கொள்ள வேண்டும்.
- விடுதலை நாளேடு,11.12.17

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த வேர்க்கடலை



குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள் வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல; இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன் மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான்.

உடலை வெப்பமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.

கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்: வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.

சர்க்கரை அளவைச் சரி செய்யும்: வேர்க்கடலையில் இருக் கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர்படுத்தக் கூடியது. சமீபத் திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம்

நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

சரும ஆரோக்கியத்தைப் பாது காக்கும்: வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதைத் தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் அப்பழுக் கற்ற சருமத்தை தரக்கூடியது. ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.
- விடுதலை நாளேடு,11.12.17