வியாழன், 29 டிசம்பர், 2016

தினமும் ஒரு நெல்லிக்கனி


கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால், உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும்.  இதை தடுக்க வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்)  மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம். இதயக்கோளாறு, நரம்பு  தளர்ச்சி, இளநரை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம்.

கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். நெல்லிக்கனியை உலர்த்தி  பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர,  கண் நோய்கள் குணமாகும்.  வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய்  கொப்ப ளித்தால் போதும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான  நீரில் தொடர்ந்து குளித்து வர நரை முடி மறையும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி நன்கு ஊறியதும் குளித்தால் முடி நன்கு செழித்து  வளரும். இதில் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும். நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய  தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடிக்க சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியை கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய் விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும். நெல்லிச்சாறுடன்  சந்தனம் அரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

நெல்லிச்சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு  நஞ்சுகள் இறங்கும். நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது.

உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லி வற்றலுடன் வில்வ இலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால்  பித்த வாந்தி நிற்கும்.

-விடுதலை,14.7.14

புதன், 30 நவம்பர், 2016

இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!

பிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

தமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள்.

இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு தேறும்.

வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவை-யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் மாறி, மூலநோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

வாயு சம்மந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் செரிமான சக்தியைத் தூண்டும். செரியாமையை போக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின்மீது வைத்துக் கட்டியும், பிரண்டையைத் துவையலாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். முறிந்த எலும்புகள் விரைவில் இணைந்து பலம் பெறும்.

ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படும்.

இப்படிப்பட்ட கோளாறுக்கும் பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறும். பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியும், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளில்-கூட பிரண்டை சேர்க்கப்படுகிறது.

பிரண்டையின் வேறு பெயர்கள், கிரண்டை அரிசினி, வச்சிரவல்லி.

தாவரப் பெயர்: VITTIS Gvandrangularis.

தாவரக் குடும்பம்: VITACEAE.

 -உண்மை இதழ்,1-15.11.16



ஞாயிறு, 27 நவம்பர், 2016

மருத்துவ தன்மை கொண்ட கொண்டைக்கடலை


தென் தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் சன்னா என்றும், ஆங்கிலத்தில் பெங்கால் கிராம் என்றும் அழைக்கப்படுகிறது.
வங்காளத்தில் அதிகம் விளை வதால் இந்தப் பெயராக இருக்கலாம். அங்கு சென்றபோது அவர்கள் அதை பச்சையாகவும் சுட்டும் சாப்பிடுவதைப் பார்க்க நேர்ந்தது. உலர வைப்பதற்கு முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது. அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து விற்கிறார்கள். தமிழ்நாட்டில் நமக்கு பச்சையாக கிடைப்பது இல்லை.
உணவு உண்பவர்களுக்கு புரதத்தை நாம் பருப்பு, பயறு வகைகள், தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்களில்  இருந்து பெறவேண்டும். மற்ற நாடுகளில் நமது நாட்டைப் போல பலவிதமான பருப்புகள், பயறு வகைகள் இருக்காது.
பொதுவாக தானியங்களுடன் பருப்பு அல்லது பயறு வகைகள் 5:1 என்ற விகிதத்தில் சேரும்போது எல்லா முக்கிய அமினோ  அமிலங்களும் சேர்ந்த முழுமையான புரதமாகப் பெற இயலும் என்பதை விஞ்ஞானம் கூறுகிறது.
இதையே நமது முன்னோர்கள் இட்லி, தோசை, பொங்கல் என்று பல டிபன் வகைகளில் மட்டுமன்றி, மதிய உணவில்,  சாதத்துடன் கூட்டு, பொரியல், சாம்பார் என பலவற்றிலும் ஒவ்வொரு விதமான பருப்பு வகைகளை சேர்ப்பதின் மூலம் பெற  இயலும் என்பதை மெய்ஞ்ஞானத்தின் மூலமே உணர்த் தினார்கள்.
மற்ற பயறு வகைகளைவிட கொண்டைக் கடலையை அதிகம்  விரும்புகிறோம். கொண்டைக்கடலை காற்றில் உள்ள ஹைட்ரஜனை உள்ளிழுப்பதால் செடியாக இருக்கும்போது மண்ணின்  சத்துகள் அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையை வேக வைக்கும் போது ஒரு சிலர் சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக சமையல் சோடா சேர்ப்பது  உண்டு. இந்த சோடாவை சேர்த்தால் முக்கிய மான தயாமின் என்னும் வைட்டமினை அழித்துவிடும். சிலருக்கு முழுப்பயறுகள்  உண்ணும்போது வாயுத் தொல்லை ஏற்படும். ஊறவைத்த தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் வாயு  பிரச்சினை குறையும்.
மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு மெத்தென்று வேக வைத்தால் வாயுத்தொல்லை அதிகம் வராது.  வேகும்போதே ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்க்கலாம்.
பிரவுன் கொண்டைக் கடலையில் வெள்ளை கொண் டைக் கடலையைவிட சத்துகள் அதிகம். ஒருசில சத்துகள் வெள்ளைக்  கடலையில் இல்லை. பயறு வகைகளிலேயே கொண்டைக்கடலையில்தான் நல்ல புரதம் கிடைக்கும்.
-விடுதலை,4.5.15

தேவையற்ற சதையை குறைக்கும் சோம்பு கீர்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் பருமன் அல்லது  ஊளைச்சதை. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.  வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்ற வையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு  காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகல் அதிக நேரம் தூங்குவது  போன்றவையும் காரணமாக உள்ளன. இது போன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்று  பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை  குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிக மாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள  தேவையற்ற  கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல்  மெலியும். இது தவிர மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.  அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச்சதை குறையும் மேலும் சதை போடுவதைச் தடுக்க  வேண்டுமென்றால் தேநீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர வேண்டும்.
இது தவிர வாழைத்தண்டு சாறு,  அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது  எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும் உடல் எடையும்  குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.
-விடுதலை,4.5.15

திங்கள், 21 நவம்பர், 2016

பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா?

தோல்கள் என்றாலே அவை தேவை யற்றவை என்று நாம் மனதில் பதிந்து போன தன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத் துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங் களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.

ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசி யம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக் களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளி களுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால் தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதி கரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க் கரை உடனே அதிகரிக்கும் தீமையையும் ஏற்படுத்தும்.

தோலுள்ள ஆப்பிளில் உள்ள சத்துக்கள் விவரம்: நார்ச்சத்து 5 கி., கால்சியம் 13 மி.கி., பொட்டாசியம் 239 மி.கி.; தோல் நீக்கப்பட்ட பழத்தில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து 3 கி., கால்சியம் 11 மி.கி. பொட்டாசியம் 194 மி.கி.

கொய்யாப் பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படு கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக் கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு.

சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங் களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப் பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குண மும் இவற்றுக்கு உண்டு. எனவே, உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் புண்கள் விரைவில் ஆறும். நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்து வரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.

வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிக ரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டு பண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப் படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப் பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.

இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற் றும் கால்சியம் சத்துக்கள் மிகுந் துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக் காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட் சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதி லுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக் கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்து விடும்.

தவிர பழங்களைச் சாறாக்கி, பால், சர்க் கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல் பையே குலைத்துவிடும். செரிமானக் கோளா றையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங் களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதே நேரம், எந்தப் பழம் என்றாலும் தண் ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பிறகே சாப்பிடவும் சமைக்கவும் செய்ய வேண்டும்.

ஆர்கானிக் பழங்களே நல்லவை!

இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டுப் பழங்களானாலும் சரி, வெளிநாட்டுப் பழங் களானாலும் சரி, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப் படுகின்றன. இப்பழங்களில் இந்த வேதி நச்சுகள் இறங்கிவிடுகின்றன. மேலும், இவை சந்தையில் விற்பனைக்கு வரும்போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக் கவும், பழங்களின் தோலில் பலதரப்பட்ட வேதிப்பொருட்களைத் தடவுகிறார்கள்.

இவை நம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கின்றன. இவற்றைக் கழுவினாலும் இந்த வேதிப்பொருட்கள் முழுவதுமாக நீங்க வழியில்லை என்றே அறிவியலாளர்கள் கருது கிறார்கள். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிட விரும்புபவர்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் வகைப் பழங்களைப் பருவத்துக்கு ஏற்பச் சாப்பிடு வதே நல்லது.
-விடுதலை,21.11.16

வியாழன், 3 நவம்பர், 2016

மாதவிலக்கு கோளாறை தீர்க்கும் பண்ணை கீரை


பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உரு வத்தை உடையது. பண்ணை கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது.
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப் படுத்த கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.
பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி வெள்ளை படுதல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.  பண்ணை கீரையின் 4 பூக்களை துண்டுகளாகி, இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்கள் ஆறும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
பண்ணை கீரையை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகுப் பொடி, நல்லெண்ணெய், உப்பு. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் விடவும். எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் சேர்க்கவும். சிறிது பூண்டு தட்டிபோடவும். இதனுடன் பண்னை கீரை, மிளகுப்பொடி, உப்பு சேர்க்கவும்.
பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதை குடித்துவர கை,கால் வலி குணமாகும். கால்சியம், இரும்பு சத்து குறைபாடு நீங்கும். வயிற்றுகோளாறுக்கு மருந்தாகிறது. அதிக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.  அதிக நன்மைகளை கொண்ட பண்ணை கீரையானது, ரத்த கசிவை கட்டுப்படுத்த கூடியது. இதில் கால்சியம், புரதச்சத்து உள்ளது. மலச்சிக்கலை சரிசெய்கிறது.
இந்த கீரையை அளவாக சாப்பிட வேண்டும். பண்ணை கீரையை பயன் படுத்தி முகப்பருவை போக்கும் மருந்து தயாரிக்கலாம். பண்ணை கீரையை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து முகப் பருவுக்கு மேல் போட்டால் பருக்கள் மறையும்.
கட்டிகளுக்கு மேல்பூச்சாக போடுவதன் மூலம் கட்டிகள் சீழ் பிடிக்காமல் குணமாகும். பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வெள்ளைப்போக்கு, மாதவிலக்கு பிரச்னைகளுக்கு பண்ணை கீரை மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. பண் ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கற்கள் கரையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும் பீர்க்கன்காய்

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடியது பீர்க்கன் காய். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல்பூச்சு மருந்தாகவும் பயன் படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கல்லீரலுக்கு பலத்தை கொடுக்கிறது. பீர்க்கன்காயில் நீர்ச்சத்து உள்ளது. இதை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பீர்க்கன்காய், சீரகம். தோல் சீவிய பீர்க்கன்காய் துண்டுகள் 50 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் வீட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கல்லீரல் பலப்படும். இது மஞ்சள் காமலை வராமல் தடுக்கிறது. ஈரல் வீக்கத்தை சரிசெய்கிறது. பித்தத்தை குறைப்பதுடன் உடல் சூட்டை தணிக்கிறது. பீர்க்கன்காயை தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்தால் இளநரை சரியாகும். பீர்க்கன்காயை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
வேகவைத்த பீர்க்கன் காய் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு, புளிப்பில் லாத தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் துண்டு, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதை பீர்க்கன்காயுடன் சேர்த்து சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். வயிற்று எரிச்சல், வலி போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். உடலுக்கு ஆரோக்கியம், பலம் தருகிறது.
பீர்க்கன்காய் தோலில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. செரி மானத்தை தூண்டுகிறது. பீர்க்கன்காய் தோலை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வரமிளக்காய், வெங்காயம், சிறிதளவு புளி, பீர்க் கன்காய் தோல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பீர்க்கன்காய் தோலின் நிறம் மாறும்போது எடுத்து ஆறவைத்து அரைத்து எடுக் கவும். இதை தாளித்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், மலச் சிக்கல் பிரச்சினை சரியாகிறது. இது நச்சுக்களை வெளி யேற்றும் தன்மை கொண்டதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
-விடுதலை,13.6.16

மருத்துவ குணம் கொண்ட புளி


நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.
இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போடும்போது வறட்சி மாறி பொலிவு ஏற்படும்.
தோலுக்கு வண்ணத்தை தருகிறது. கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய புளியை பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்து தயாரிக்கலாம். புளிய இலைகளுடன் வேப்பிலை சேர்க்கவும்.
இதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்து புண்களை கழுவும்போது ரத்தகசிவு கட்டுப்படும். தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. சீல் பிடிக்காமல் புண் சீக்கிரம் ஆறும்.புளிய மரத்தின் இலை ரத்தத்தை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. இலைகளை அரைத்து அடிபட்ட இடத்தில் பூசும்போது உடனடியாக ரத்தக்கசிவு நின்றுபோகும். காயங்கள் விரைவில் ஆறும்.
புளியம்பழத்தை பயன்படுத்தி செரிமான கோளாறை போக்கும் மருந்து தயாரிக்கலாம். புளியம் பழத்தின் ஓடுகளை நீக்கிவிட்டு பழத்தை எடுக்கவும். இதனுடன் தனியா பொடி, 2 கிராம்பூ, 2 ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது. கொழுப்பை குறைப்பதுடன் ஈரலுக்கு பலம் தருகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், பசியின்மைக்கு புளியம்பழம் தேனீர் மருந்தாகிறது.
புளியமரத்தின் இலையை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம், ரத்தக்கட்டுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சிறிது புளியம் இலைகளை சேர்த்து வதக்கவும். ரத்த கட்டு, வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைத்தால் குணமாகும். மூட்டுவலிக்கு மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட புளி பித்தசமனியாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோலுக்கு நல்ல வண்ணத்தை தருகிறது.
-விடுதலை,6.6.16

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

கோடைகாலத்தில் சாலையோரத்தில் சரம் சரமாக பூத்து குலுங் குவது சரக்கொன்றை மரம். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்கு கிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சரக் கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது.
சரக்கொன்றை மரத்தின் இலையை பயன்படுத்தி படர்தா மரைக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும். சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.   சரக்கொன்றை மரத்தின் காய்க்குள் இருக்கும் புளியை பயன்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். நெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும். அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடித்தால் சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். 10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.
சரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது. இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது.
காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது.சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். சரக்கொன்றை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும். இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
-விடுதலை,6.6.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்


முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைப் பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப் பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டு மின்றி எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.
பூவன் வாழைப் பழம்: பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.
பச்சை வாழைப் பழம்: பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும். கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம். வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
மொந்தன் வாழைப் பழம்: மொந்தன் வாழைப் பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். காமாலைக்கு இது சிறந்த பழம்.
ரஸ்தாளி வாழைப் பழம்: ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம்.
குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால் இருதயம் வலுப்படும்.
நேந்திரம் வாழைப் பழம்: நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.
காச நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் பருமனடையும்.
சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திர பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
செவ்வாழைப் பழம்: செவ்வாழைப் பழம் கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின்  அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.
-விடுதலை,29.8.16

கொத்தவரையின் மருத்துவ குணங்கள்


Glyconutrient  என்னும் மருத்துவ வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைகோ நியூட்ரியன்ட் பெரிதும் உதவுகிறது. கொத்த வரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.
கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப் பானாகவும், புண்கள் ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஆன தன்மைகளைப் பெற்றுள்ளன. சுண்ணாம்புச் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள் நன்கு பலப்படும். இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாகிறது என்று சொல்லலாம்.
கொத்தவரை இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத் துக்குத் தடையாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.
கொத்த வரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து களைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக் கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கொத்த வரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துகள் தேவைப்படுகின்றன.
மேலும் கொத்தவரையில் உள்ள வைட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங் குகிறது. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோ குளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது.
இதில் இருக்கும்  வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல் பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க் கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்தவரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் தரு வதாக விளங்குகிறது. மேலும் இச்சத்துகள் மனஉளைச்சல் மற்றும் இதய படபடப்பு  ஆகியவற்றைப் போக்க உதவி செய்து மனிதனுக்கு அமைதி தரவல்லதாகவும் விளங்குகிறது.
கொத்தவரை மருந்தாகும் விதம்: கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சுடு நீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது. கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப் பிலை, மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து நீராக்கிக் குடிப்பதால் இரவு நேரப் பார்வைக் குறைபாடு விரைவில் நீக்கப் பெறுகிறது. கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் 10 கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோயையும் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு. பலன் தெரியாமலேயே பயன்படுத்தி வந்த கொத்த வரையை, இனி பரிபூரணமாக உணர்ந்து பயன்படுத்துவோம்.

உடல் பருமன் புற்று நோய்களை உருவாக்கும்
உடல் பருமன் காரணமாக வயிறு, கல்லீரல், கருப்பை உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி, மற்றும் எண்ணெய் கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுதல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் 64 கோடி பெரியவர்களும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதுவே பல விதமான நோய்களுக்கு காரணியாக திகழ்கிறது. குறிப்பாக வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம்,கர்ப்பபை, மூளை, தைராய்டு மற்றும் ரத்த புற்று நோய் உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாக காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்த ஆய்வை உலகசுகாதார மய்யத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையைச் சேர்ந்த கிரகாம் கோல்டிஷ் நடத்தினார்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள 1000 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட 8 விதமான புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, உடலை பருமன் ஆகாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-விடுதலை,29.8.16

மலச்சிக்கலை தீர்க்கும் பாகற்காய்


மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்கு வதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்க கூடியதாக அமைகிறது. உடலில் எங்கும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பாகற்காய் உடலுக்கு பலம் கொடுக்க கூடிய தன்மை கொண்டது. நோயுற்றவர்கள் உடலை தேற்றுவதற்கு பாகற்காய் பயன் படுகிறது. மலச்சிக்கலை போக்கும் பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பாகற்காய், பனங்கற்கண்டு. பாகற்காயை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டாமல் பாவற்காயுடன் சேர்த்து குடிக்கவும். பாகற்காய் தேநீர் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதிலாக மிளகு, சீரகம், உப்பு சேர்த்து பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
பாகற்காய் இலையை பயன்படுத்தி மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தயிர், பாகற்காய் இலை. ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிருடன், ஒரு ஸ்பூன் பாகற்காய் இலை பசையை சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உள் மற்றும் வெளி மூலத்தால் உண்டாகும் எரிச்சல், ரத்தப்போக்கு குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்தாக பாகற்காய் இலை விளங்குகிறது. அரை ஸ்பூன் பாகற்காய் இலை பசை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டுவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கால் ஸ்பூன் பாகற்காய் இலை பசை, தேன் சேர்த்து கொடுக்கலாம். பாகற்காய் இலை மேல்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. உள் மருந்தாகி பூச்சிகளை வெளியேற்றுகிறது. பாகற்காய் உணவாகி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
கை, கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வீட்டில் இருக்க கூடிய இஞ்சி நல்ல மருந்தாகிறது. நீலகிரி தைலத்தோடு சிறிது இஞ்சி சாறு கலந்து மேல் பற்றாக போடும் போது கைகால் வலி, மூட்டுவலி, முழங்கால் வலி, கழுத்து வலி உள்ளிட்டவை வெகு விரைவில் விலக்கிப்போகும்.
-விடுதலை,29.8.16

புற்றுநேயைத் தடுக்க தூதுவளை

தூதுவளை இலைகள், தண்டு, காய், பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. கீரைகளிலேயே இயற்கையான ஸ்டீராய்டு கொண்டது இது. ஆன்ட்டிபாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளை உள்ளடக்கிய உன்னதக் கீரை இது!
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல் சரியாக : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சளி, இருமலுக்கான மிகச் சிறந்த மருந்து தூதுவளை. இதை கஷாயமாகவோ, வேறு எந்த வடிவிலோ உணவில் சேர்த்துக் கொள்கிற வர்களுக்கு மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டைக் கர கரப்பு போன்றவை வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். தூதுவளையைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, சூடான பாலில் தினமும் சிறிதளவு கலந்து குடித்து வர, நாள்பட்ட இருமலும் குணமாகும்.
சைனஸ் பிரச்னைக்கும்  இதன் இலை மற்றும் தண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் குடித்துவர, சைனஸால் ஏற்படுகிற மூச்சுத் திணறல் சரியாகும். வைரஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்களுக்கும் இதை முயற்சி செய்யலாம்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை கரைய : இன்று டான்சில்ஸ் எனப்படுகிற தொண் டைச் சதை வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இல்லை. ஒரு கைப்பிடி அளவு தூதுவளையுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை தலா 10 கிராம் அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மி.லி. அளவுக்கு தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டைச் சதை கரையத் தொடங்கும்.
ஆஸ்துமா அவதிகளுக்கு : ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளையின் மகிமைக்கு இணையே இல்லை.  இதன் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமா குணமடைவதுடன், அதன் தீவிரத்தால் ஏற்படு கிற குரல் பாகுபாடு மற்றும் பசியற்ற நிலை போன்றவை சரியாகும்.
புற்றுநேயைத் தடுக்க : புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென் தன்மைக்கு எதிராகப் போராடும் தன்மை தூதுவளைக்கு உண்டு என்கிறார்கள். தூதுவளையை வாரத் தில் ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுமாம். புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களும் தூதுவளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவு மீளலாம் என் கின்றன ஆய்வுகள்.
நீரிழிவு பாதிப்புகளின் தீவிரம் தவிர்க்க: நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவின் காரணமாக, பலருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிக்கப் படுவதும் தொடர்கிறது.
தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையானது நீரி ழிவைக் கட்டுப்படுத்தி, செல்கள், திசுக்கள் பாதிப்பையும் தவிர்க்கிறது. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் முறை யாகப் பராமரிக்கப்படுகிறது.
கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத் துக்கு: தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சி டென்ட் மற்றும் தன்மைகள் கல்லீரலின் ஆரோக் கியத்தைக் காக்க உதவுகின்றன. இதன் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வயிற்றுக் கோளாறுகளை விரட்ட : தூது வளைக் கீரையை மிளகு சேர்த்து அரைக்கவும்.  அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் வாயுக் கோளாறு மற்றும் சூடு காரணமாக ஏற்படும் வயிற்றுவலி பறந்து போகும்.
ரத்த ஓட்டத்தை சீராக்க :  தூதுவளைக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்தத்தை விருத்தி செய்யவும் கூடிய குணங்கள் உண்டு என்கிறார்கள்.
காதுக் கோளாறுகள் நீங்கவும், நினைவாற் றலுக்கும்: காதுவலி மற்றும் கேட்கும் திறன் பிரச் சினைகளுக்கு தூதுவளையின் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் பூக்க ளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சக்தி உண்டு.
மலச்சிக்கல் குணமாக : தூதுவளைச் செடியில் சிவப்பு நிறத்தில் பழங்கள் வரும். அவற்றைக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் சரியாவதுடன், அசிடிட்டி எனப்படுகிற பிரச்சினையும் குணமாகும். அதே பொடிக்கு வாதநோய் பாதிப்புகளை சரியாக்கும் குணமும் உண்டாம்.
-விடுதலை,22.8.16

உள்நாக்கு பிரச்சினையைத் தீர்க்கும் வெள்ளைப்பூண்டு

பூண்டு என்றவுடன்  அதன் வாசனையால் முகம் சுளிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு மருத்துவ குணம் கொண்டது என்பதை அறிந்தவர்கள் சிலரே! வெள்ளைப் பூண்டு தட்டையான இலைகள் கொண்ட சிறு செடி. இதன் கிழங்குகள் காரமணத்துடன் குமிழ்வடிவத்தில் இருக்கும். அதுவே பூண்டு என அழைக்கப்படுகிறது. அதன் உள்ளே 10 அல்லது 12 பிரிவுகள் அமைந்திருக்கும் அவை பூண்டுப் பற்கள் என அழைக்கிறோம்.
பூண்டு உலகின் பல பகுதிகளில் சிறந்த உணவுப் பொருளாகவும், மருந்தாகவும், அழகு மற்றும் வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாகிய பூண்டு வியர்வையை பெருக்கும். உடற்சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பாலை விருத்தி செய்யும். சளியை கரைக்கும் இரத்த கொதிப்பை சரிசெய்யும். நீரிழிவு உள்ளவர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பூண்டில் அமைந்துள்ள ஈதர் நமது நுரையீரல் மற்றும் மகத்தில் அமைந்துள்ள சைனஸ் பகுதிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றும் குணம் கொண்டதாகும். வெள்ளைப் பூண்டு பற்களை 10 எடுத்து பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி முதலியவை தீரும். குடலில் உள்ள புழுக்கள் மடிந்து மலத் துடன் வெளியேறும்.
பூண்டை உரித்து கைப்பிடி அளவு எடுத்து 300மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு உணவுக்கு பின்பு குடித்து பூண்டைத் தின்றால் ரத்தஅழுத்தம் சீராகும். மாரடைப்பு வராது. தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது. நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் ஊளை சதை குறையும். உடல் எடையும் படிப்படியாக குறையும்.
தொடக்க நிலை மூட்டு வலி உள்ளவர்கள் பூண்டை நசுக்கி அந்தச் சாற்றுடன் சிறிது சூடத்தை கரைத்து மூட்டுகளில் தடவிவந்தால் மூட்டுவலி  குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம்,  ஆமணக்கு நெய் 1000மிலி  எடுத்து அதில் இதைத் தட்டி போட்டு அதனுடன் 100 மி.லி. எருக்கிலைசாறு சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். மூட்டுவலி , வாத வலியுள்ள இடங்களில் தடவிவந்தால் குணமாகும்.
நமது வழக்கமான உணவுபொருட்களில் வாயு தன்மை கொண்டவையே அதிகமாக பயன்படுத்துவதால் மலச் சிக்கல் வாயு, அஜீரணக்கோளாறு, புளிப்பு, வயிற்று பொறுமல், வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே நாள் தோறும் ஆறு பூண்டுப் பற்களை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
அளவுக்கதிகமான வாயுக் கோளாறுகளால் துன்பப்படு வோர் தேவையான அளவு பூண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டு  பாலாவியில் வேகவைத்து அதனுடன் அதே அளவு பனைவெல்லம் சேர்த்து  சிறிதளவு சுக்கை பொடித்து போட்டு அடுப்பில் வைத்து இளகலாக செய்து அதில் சிறிதளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவேண்டும். இதில்  இரண்டு தேக்கரண்டி வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர அனைத்து வகையான வாய்வுக்கோளாறுகளும் குணமாகும்.
தற்போது பூண்டுத்தேன் என சித்தமருந்து கடைகளிலும் கிடைக்கிறது. உள்நாக்கு தடித்தோ சற்று சதைவளர்ச்சி அதிகமா னோலோ சிறிது பூண்டை நசுக்கி  அதனுடன் இஞ்சிசாறுவிட்டு அரைத்து சிறிது தேன் கலந்து காலை மாலை சாப்பாட்டுக்கு முன்பாக இரண்டு தேக்கரண்டிவீதம் குடிக்கவேண்டும். இந்த விழுதை தொண்டையின் மேல் பக்கம் பூசி வர வேண்டும். மூன்றே நாட்களில் குணமாகும்.
உடலில் வெள்ளைத் தேமல் ஏற்பட்டால் உலகமே அழிந்து விட்டதைப்போல் சிலர் மனக்கவலை கொள்வார்கள். இவர்கள் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து பூசி வந்தால் வெண்ணிறம் மாறி இயல்பு நிலைக்குத் தோல் மாறும். காசநோயால் துன்பப்படுபவர்கள்  300மிலி பசும்பாலுடன் அதே அளவு தண்ணீர் கலந்து அதனுடன் பத்து மிளகு, சிறிது மஞ்சள்தூள் கலந்து அதில் ஒரு பூண்டை உரித்துப் போட்டு நன்கு காய்ச்சி பாதியாகச் சுண்டியவுடன் வடிகட்டி பாலை குடித்துவிட்டு பூண்டை சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட வேண்டும். குணம் அடையும் வரை குடித்து வரலாம்.
நெஞ்சுகுத்து என்னும்  வலியால் துன்பப்படுவோர்கள் பூண்டு சாற்றையும் இஞ்சி சாற்றையும், சம அளவு கலந்து காலை மாலை மூன்றுநாட்கள் சாப்பிட நெஞ்சக்குத்து நீங்கும். சிலருக்கு புழுவெட்டு ஏற்பட்டு தலை மற்றும் மீசையில் ஒரு பகுதியில் அல்லது திட்டுத் திட்டாக முடி வளராமல் இருக்கும். இவர்கள் பூண்டை அரைத்து தேன்விட்டு குழைத்து முடிவளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் முடிவளரும். வாயு தொல்லையால் வயிறு உப்புதல், சத்தத்துடன் வாயு பிரிதல்,
வாத நோய் உள்ளவர்கள். அரைக்கீரையுடன் ஒரு பூண்டைத் தோலுரித்துப் போட்டு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீரும். உரித்த பூண்டு பத்துகிராம் எடுத்து 50மிலி நல்லெண்ணெயில் போட்டுகாய்ச்சி ஆறவைத்த இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காது மந்தம் முதலிய பிரச்சினை தீரும்.
ஒருபூண்டு, பத்து மிளகு, கரிசலாங்கண்ணிக்கீரையுடன் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட சோகைநோய் குணமாகும். வாதம் அதிகரித்து உடலில் வலி ஏற்பட்டால் பூண்டு அதே அளவு துத்திகீரையும் நசுக்கி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை உடலில் தடவி வந்தால் வலி குறையும். 250 மி.லி. பாலில் 6 பூண்டு பற்கள் போட்டு காய்ச்சி பனகற்கண்டு சேர்த்து இரவில் குடித்து பூண்டைசாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.
இரத்தக் கொதிப்பு அடங்கும். பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கை நகத்தால் கிள்ளுதல் கூடாது. பூண்டை  உடைத்து இழைத்தால் வரும் விழுதை இந்தப் பருக்களின் மீது பூசிவர பரு உடைந்து ஆறும். வடு ஏற்படாது.
வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்தால் அந்த கடி வாயில் பூண்டை அரைத்துக்கட்டவேண்டும். கடிவாயில் கட்டிய பூண்டால் எரிச்சல் உண்டாகும். தாங்கமுடியாத எரிச்சல் ஏற்பட்டால் நஞ்சு இறங்கியது என்பதை அறிந்து பூண்டை எடுத்து விடவேண்டும். அனைத்து வகையிலும் வேகவைத்து உண்பதே சிறந்ததாகும். நாட்டுபூண்டையே அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும்.
மலைப்பூண்டு தேவையான அளவிலேயே எடுக்கவேண்டும். அமுதே ஆனாலும் அளவறிந்து உண்ண வேண்டும், என்பது நமது முன்னோர்கள் நமக்கு தெரிவித்த வழி முறையாகும் அந்த வழியில் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.
-விடுதலை,22.8.16