ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்


முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைப் பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப் பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டு மின்றி எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.
பூவன் வாழைப் பழம்: பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.
பச்சை வாழைப் பழம்: பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும். கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம். வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
மொந்தன் வாழைப் பழம்: மொந்தன் வாழைப் பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். காமாலைக்கு இது சிறந்த பழம்.
ரஸ்தாளி வாழைப் பழம்: ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம்.
குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால் இருதயம் வலுப்படும்.
நேந்திரம் வாழைப் பழம்: நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.
காச நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் பருமனடையும்.
சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திர பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
செவ்வாழைப் பழம்: செவ்வாழைப் பழம் கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின்  அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.
-விடுதலை,29.8.16

கொத்தவரையின் மருத்துவ குணங்கள்


Glyconutrient  என்னும் மருத்துவ வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைகோ நியூட்ரியன்ட் பெரிதும் உதவுகிறது. கொத்த வரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை.
கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப் பானாகவும், புண்கள் ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஆன தன்மைகளைப் பெற்றுள்ளன. சுண்ணாம்புச் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள் நன்கு பலப்படும். இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாகிறது என்று சொல்லலாம்.
கொத்தவரை இதய ஆரோக் கியத்துக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத் துக்குத் தடையாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.
கொத்த வரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து களைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக் கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கொத்த வரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துகள் தேவைப்படுகின்றன.
மேலும் கொத்தவரையில் உள்ள வைட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங் குகிறது. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்த வரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோ குளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது.
இதில் இருக்கும்  வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல் பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க் கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்தவரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் தரு வதாக விளங்குகிறது. மேலும் இச்சத்துகள் மனஉளைச்சல் மற்றும் இதய படபடப்பு  ஆகியவற்றைப் போக்க உதவி செய்து மனிதனுக்கு அமைதி தரவல்லதாகவும் விளங்குகிறது.
கொத்தவரை மருந்தாகும் விதம்: கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சுடு நீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது. கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப் பிலை, மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து நீராக்கிக் குடிப்பதால் இரவு நேரப் பார்வைக் குறைபாடு விரைவில் நீக்கப் பெறுகிறது. கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் 10 கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோயையும் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு. பலன் தெரியாமலேயே பயன்படுத்தி வந்த கொத்த வரையை, இனி பரிபூரணமாக உணர்ந்து பயன்படுத்துவோம்.

உடல் பருமன் புற்று நோய்களை உருவாக்கும்
உடல் பருமன் காரணமாக வயிறு, கல்லீரல், கருப்பை உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி, மற்றும் எண்ணெய் கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுதல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் 64 கோடி பெரியவர்களும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதுவே பல விதமான நோய்களுக்கு காரணியாக திகழ்கிறது. குறிப்பாக வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம்,கர்ப்பபை, மூளை, தைராய்டு மற்றும் ரத்த புற்று நோய் உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாக காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்த ஆய்வை உலகசுகாதார மய்யத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையைச் சேர்ந்த கிரகாம் கோல்டிஷ் நடத்தினார்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள 1000 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட 8 விதமான புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, உடலை பருமன் ஆகாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-விடுதலை,29.8.16

மலச்சிக்கலை தீர்க்கும் பாகற்காய்


மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்கு வதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்க கூடியதாக அமைகிறது. உடலில் எங்கும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பாகற்காய் உடலுக்கு பலம் கொடுக்க கூடிய தன்மை கொண்டது. நோயுற்றவர்கள் உடலை தேற்றுவதற்கு பாகற்காய் பயன் படுகிறது. மலச்சிக்கலை போக்கும் பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பாகற்காய், பனங்கற்கண்டு. பாகற்காயை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டாமல் பாவற்காயுடன் சேர்த்து குடிக்கவும். பாகற்காய் தேநீர் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதிலாக மிளகு, சீரகம், உப்பு சேர்த்து பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
பாகற்காய் இலையை பயன்படுத்தி மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தயிர், பாகற்காய் இலை. ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிருடன், ஒரு ஸ்பூன் பாகற்காய் இலை பசையை சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உள் மற்றும் வெளி மூலத்தால் உண்டாகும் எரிச்சல், ரத்தப்போக்கு குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்தாக பாகற்காய் இலை விளங்குகிறது. அரை ஸ்பூன் பாகற்காய் இலை பசை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டுவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கால் ஸ்பூன் பாகற்காய் இலை பசை, தேன் சேர்த்து கொடுக்கலாம். பாகற்காய் இலை மேல்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. உள் மருந்தாகி பூச்சிகளை வெளியேற்றுகிறது. பாகற்காய் உணவாகி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
கை, கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வீட்டில் இருக்க கூடிய இஞ்சி நல்ல மருந்தாகிறது. நீலகிரி தைலத்தோடு சிறிது இஞ்சி சாறு கலந்து மேல் பற்றாக போடும் போது கைகால் வலி, மூட்டுவலி, முழங்கால் வலி, கழுத்து வலி உள்ளிட்டவை வெகு விரைவில் விலக்கிப்போகும்.
-விடுதலை,29.8.16

புற்றுநேயைத் தடுக்க தூதுவளை

தூதுவளை இலைகள், தண்டு, காய், பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. கீரைகளிலேயே இயற்கையான ஸ்டீராய்டு கொண்டது இது. ஆன்ட்டிபாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளை உள்ளடக்கிய உன்னதக் கீரை இது!
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல் சரியாக : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சளி, இருமலுக்கான மிகச் சிறந்த மருந்து தூதுவளை. இதை கஷாயமாகவோ, வேறு எந்த வடிவிலோ உணவில் சேர்த்துக் கொள்கிற வர்களுக்கு மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டைக் கர கரப்பு போன்றவை வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். தூதுவளையைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, சூடான பாலில் தினமும் சிறிதளவு கலந்து குடித்து வர, நாள்பட்ட இருமலும் குணமாகும்.
சைனஸ் பிரச்னைக்கும்  இதன் இலை மற்றும் தண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் குடித்துவர, சைனஸால் ஏற்படுகிற மூச்சுத் திணறல் சரியாகும். வைரஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்களுக்கும் இதை முயற்சி செய்யலாம்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை கரைய : இன்று டான்சில்ஸ் எனப்படுகிற தொண் டைச் சதை வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இல்லை. ஒரு கைப்பிடி அளவு தூதுவளையுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை தலா 10 கிராம் அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மி.லி. அளவுக்கு தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டைச் சதை கரையத் தொடங்கும்.
ஆஸ்துமா அவதிகளுக்கு : ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளையின் மகிமைக்கு இணையே இல்லை.  இதன் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமா குணமடைவதுடன், அதன் தீவிரத்தால் ஏற்படு கிற குரல் பாகுபாடு மற்றும் பசியற்ற நிலை போன்றவை சரியாகும்.
புற்றுநேயைத் தடுக்க : புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென் தன்மைக்கு எதிராகப் போராடும் தன்மை தூதுவளைக்கு உண்டு என்கிறார்கள். தூதுவளையை வாரத் தில் ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுமாம். புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களும் தூதுவளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவு மீளலாம் என் கின்றன ஆய்வுகள்.
நீரிழிவு பாதிப்புகளின் தீவிரம் தவிர்க்க: நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவின் காரணமாக, பலருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிக்கப் படுவதும் தொடர்கிறது.
தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையானது நீரி ழிவைக் கட்டுப்படுத்தி, செல்கள், திசுக்கள் பாதிப்பையும் தவிர்க்கிறது. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் முறை யாகப் பராமரிக்கப்படுகிறது.
கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத் துக்கு: தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சி டென்ட் மற்றும் தன்மைகள் கல்லீரலின் ஆரோக் கியத்தைக் காக்க உதவுகின்றன. இதன் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வயிற்றுக் கோளாறுகளை விரட்ட : தூது வளைக் கீரையை மிளகு சேர்த்து அரைக்கவும்.  அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் வாயுக் கோளாறு மற்றும் சூடு காரணமாக ஏற்படும் வயிற்றுவலி பறந்து போகும்.
ரத்த ஓட்டத்தை சீராக்க :  தூதுவளைக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்தத்தை விருத்தி செய்யவும் கூடிய குணங்கள் உண்டு என்கிறார்கள்.
காதுக் கோளாறுகள் நீங்கவும், நினைவாற் றலுக்கும்: காதுவலி மற்றும் கேட்கும் திறன் பிரச் சினைகளுக்கு தூதுவளையின் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் பூக்க ளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சக்தி உண்டு.
மலச்சிக்கல் குணமாக : தூதுவளைச் செடியில் சிவப்பு நிறத்தில் பழங்கள் வரும். அவற்றைக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் சரியாவதுடன், அசிடிட்டி எனப்படுகிற பிரச்சினையும் குணமாகும். அதே பொடிக்கு வாதநோய் பாதிப்புகளை சரியாக்கும் குணமும் உண்டாம்.
-விடுதலை,22.8.16

உள்நாக்கு பிரச்சினையைத் தீர்க்கும் வெள்ளைப்பூண்டு

பூண்டு என்றவுடன்  அதன் வாசனையால் முகம் சுளிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு மருத்துவ குணம் கொண்டது என்பதை அறிந்தவர்கள் சிலரே! வெள்ளைப் பூண்டு தட்டையான இலைகள் கொண்ட சிறு செடி. இதன் கிழங்குகள் காரமணத்துடன் குமிழ்வடிவத்தில் இருக்கும். அதுவே பூண்டு என அழைக்கப்படுகிறது. அதன் உள்ளே 10 அல்லது 12 பிரிவுகள் அமைந்திருக்கும் அவை பூண்டுப் பற்கள் என அழைக்கிறோம்.
பூண்டு உலகின் பல பகுதிகளில் சிறந்த உணவுப் பொருளாகவும், மருந்தாகவும், அழகு மற்றும் வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாகிய பூண்டு வியர்வையை பெருக்கும். உடற்சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பாலை விருத்தி செய்யும். சளியை கரைக்கும் இரத்த கொதிப்பை சரிசெய்யும். நீரிழிவு உள்ளவர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பூண்டில் அமைந்துள்ள ஈதர் நமது நுரையீரல் மற்றும் மகத்தில் அமைந்துள்ள சைனஸ் பகுதிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றும் குணம் கொண்டதாகும். வெள்ளைப் பூண்டு பற்களை 10 எடுத்து பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி முதலியவை தீரும். குடலில் உள்ள புழுக்கள் மடிந்து மலத் துடன் வெளியேறும்.
பூண்டை உரித்து கைப்பிடி அளவு எடுத்து 300மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு உணவுக்கு பின்பு குடித்து பூண்டைத் தின்றால் ரத்தஅழுத்தம் சீராகும். மாரடைப்பு வராது. தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது. நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் ஊளை சதை குறையும். உடல் எடையும் படிப்படியாக குறையும்.
தொடக்க நிலை மூட்டு வலி உள்ளவர்கள் பூண்டை நசுக்கி அந்தச் சாற்றுடன் சிறிது சூடத்தை கரைத்து மூட்டுகளில் தடவிவந்தால் மூட்டுவலி  குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம்,  ஆமணக்கு நெய் 1000மிலி  எடுத்து அதில் இதைத் தட்டி போட்டு அதனுடன் 100 மி.லி. எருக்கிலைசாறு சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். மூட்டுவலி , வாத வலியுள்ள இடங்களில் தடவிவந்தால் குணமாகும்.
நமது வழக்கமான உணவுபொருட்களில் வாயு தன்மை கொண்டவையே அதிகமாக பயன்படுத்துவதால் மலச் சிக்கல் வாயு, அஜீரணக்கோளாறு, புளிப்பு, வயிற்று பொறுமல், வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே நாள் தோறும் ஆறு பூண்டுப் பற்களை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
அளவுக்கதிகமான வாயுக் கோளாறுகளால் துன்பப்படு வோர் தேவையான அளவு பூண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டு  பாலாவியில் வேகவைத்து அதனுடன் அதே அளவு பனைவெல்லம் சேர்த்து  சிறிதளவு சுக்கை பொடித்து போட்டு அடுப்பில் வைத்து இளகலாக செய்து அதில் சிறிதளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவேண்டும். இதில்  இரண்டு தேக்கரண்டி வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர அனைத்து வகையான வாய்வுக்கோளாறுகளும் குணமாகும்.
தற்போது பூண்டுத்தேன் என சித்தமருந்து கடைகளிலும் கிடைக்கிறது. உள்நாக்கு தடித்தோ சற்று சதைவளர்ச்சி அதிகமா னோலோ சிறிது பூண்டை நசுக்கி  அதனுடன் இஞ்சிசாறுவிட்டு அரைத்து சிறிது தேன் கலந்து காலை மாலை சாப்பாட்டுக்கு முன்பாக இரண்டு தேக்கரண்டிவீதம் குடிக்கவேண்டும். இந்த விழுதை தொண்டையின் மேல் பக்கம் பூசி வர வேண்டும். மூன்றே நாட்களில் குணமாகும்.
உடலில் வெள்ளைத் தேமல் ஏற்பட்டால் உலகமே அழிந்து விட்டதைப்போல் சிலர் மனக்கவலை கொள்வார்கள். இவர்கள் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து பூசி வந்தால் வெண்ணிறம் மாறி இயல்பு நிலைக்குத் தோல் மாறும். காசநோயால் துன்பப்படுபவர்கள்  300மிலி பசும்பாலுடன் அதே அளவு தண்ணீர் கலந்து அதனுடன் பத்து மிளகு, சிறிது மஞ்சள்தூள் கலந்து அதில் ஒரு பூண்டை உரித்துப் போட்டு நன்கு காய்ச்சி பாதியாகச் சுண்டியவுடன் வடிகட்டி பாலை குடித்துவிட்டு பூண்டை சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட வேண்டும். குணம் அடையும் வரை குடித்து வரலாம்.
நெஞ்சுகுத்து என்னும்  வலியால் துன்பப்படுவோர்கள் பூண்டு சாற்றையும் இஞ்சி சாற்றையும், சம அளவு கலந்து காலை மாலை மூன்றுநாட்கள் சாப்பிட நெஞ்சக்குத்து நீங்கும். சிலருக்கு புழுவெட்டு ஏற்பட்டு தலை மற்றும் மீசையில் ஒரு பகுதியில் அல்லது திட்டுத் திட்டாக முடி வளராமல் இருக்கும். இவர்கள் பூண்டை அரைத்து தேன்விட்டு குழைத்து முடிவளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் முடிவளரும். வாயு தொல்லையால் வயிறு உப்புதல், சத்தத்துடன் வாயு பிரிதல்,
வாத நோய் உள்ளவர்கள். அரைக்கீரையுடன் ஒரு பூண்டைத் தோலுரித்துப் போட்டு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீரும். உரித்த பூண்டு பத்துகிராம் எடுத்து 50மிலி நல்லெண்ணெயில் போட்டுகாய்ச்சி ஆறவைத்த இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காது மந்தம் முதலிய பிரச்சினை தீரும்.
ஒருபூண்டு, பத்து மிளகு, கரிசலாங்கண்ணிக்கீரையுடன் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட சோகைநோய் குணமாகும். வாதம் அதிகரித்து உடலில் வலி ஏற்பட்டால் பூண்டு அதே அளவு துத்திகீரையும் நசுக்கி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை உடலில் தடவி வந்தால் வலி குறையும். 250 மி.லி. பாலில் 6 பூண்டு பற்கள் போட்டு காய்ச்சி பனகற்கண்டு சேர்த்து இரவில் குடித்து பூண்டைசாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.
இரத்தக் கொதிப்பு அடங்கும். பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கை நகத்தால் கிள்ளுதல் கூடாது. பூண்டை  உடைத்து இழைத்தால் வரும் விழுதை இந்தப் பருக்களின் மீது பூசிவர பரு உடைந்து ஆறும். வடு ஏற்படாது.
வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்தால் அந்த கடி வாயில் பூண்டை அரைத்துக்கட்டவேண்டும். கடிவாயில் கட்டிய பூண்டால் எரிச்சல் உண்டாகும். தாங்கமுடியாத எரிச்சல் ஏற்பட்டால் நஞ்சு இறங்கியது என்பதை அறிந்து பூண்டை எடுத்து விடவேண்டும். அனைத்து வகையிலும் வேகவைத்து உண்பதே சிறந்ததாகும். நாட்டுபூண்டையே அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும்.
மலைப்பூண்டு தேவையான அளவிலேயே எடுக்கவேண்டும். அமுதே ஆனாலும் அளவறிந்து உண்ண வேண்டும், என்பது நமது முன்னோர்கள் நமக்கு தெரிவித்த வழி முறையாகும் அந்த வழியில் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.
-விடுதலை,22.8.16

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


எளிதில் கிடைக்கக் கூடிய, விலை மலிவாக இருக்கக்கூடிய, பக்க விளைவுகள் இல்லாத, நோய்களைக் கட்டுப்படுத்தும் வேதிப் பொருட் களைக் கொண்ட உணவுப் பொரு ளான வெந்தயம், பல்வேறு நோய் களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.
வெந்தயத்தில் நிறைய வேதிப் பொருட்கள் உள்ளன. அவற்றில் இன்சுலின் சாராத நீரிழிவைக் கட்டுப் படுத்தும் வேதிப்பொருட்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்:
1. குயிர்செடின், 2. டிரைகோனலின், 3. டைசோ ஜெனின், 4. கேலக்டோமனான், 5. ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4)
குயிர்செடின்: இது மருத்துவக் குணம் கொண்ட பிளேவனாய்டு. இது நீரிழிவு நோயைப் பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்துகிறது:
அ) குடலில் சர்க்கரை (குளுகோஸ்) உறிஞ்சப்படும் நிலையில் தடுக்கப்படுவதால், ரத்தத்தில் குளுகோஸ் உயர்வதைத் தடுக்கிறது.
ஆ) ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத் தும் நாளமில்லா சுரப்பியான இன்சுலினைச் சுரக்கக் கூடிய கணையச் செல்களை ஊக்குவிப்பது மட்டுமில் லாமல் அழியாமலும் பாதுகாக்கிறது.
இ) ரத்தத்தில் உள்ள குளுகோஸை தசைகள் அதிகம் எடுத்துக்கொள்ளத் துணைபுரிவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
டிரைகோனலின்: இது ஆல்கலாய்டு வகையைச் சேர்ந்த வேதிப்பொருள். வெந்தயத்தைச் சட்டியில் இட்டுப் பொன்வறுவலாக வறுக்கும்போது, அதன் கசப்புத்தன்மை குறையும். இவ்வாறு வறுக்கும்போது டிரைகோனலின் என்ற ஆல்கலாய்டு வேதிமாற்றம் அடைந்து நிக்கோடினிக் அமிலம் என்ற வைட்டமின் பி 3-யாக உருவாகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வறுத்த வெந் தயத்தை உட்கொண்டால் வைட்டமின் பி 3 குறைவால் ஏற்படும் நோய்களான வாய்ப்புண்; கழிச்சல் போன்றவை தடுக்கப்படும். முளைகட்டிய வெந்தய விதையிலும் வைட்டமின் பி 3 உருவாகிறது என் பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
டைசோஜெனின்: வெந்தயத்தில் உள்ள சப்போனின் வகையைச் சேர்ந்த வேதிப் பொருள் இது. நோய் அறிகுறிகளை உடனடியாகக் குறைக் கும் ஸ்டீராய்டுகள் என்ற ஆங்கில மருந்துகளைச் செயற்கையாகத் தயா ரிக்க உதவும் மூலப்பொருள் இது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை இந்த வேதிப்பொருள் மலம் வழியாக வெளியேற்றுவ தால், நீரிழிவின் துணைநோயான ரத்தக்கொழுப்பின் அளவை உடலில் குறைத்து, சரியான விகிதத்தை அடைய உதவுகிறது. அத்துடன், ரத்தக் குளுகோஸ் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கேலக்டோமனான்: வெந்தயத்தில் உள்ள கரையும்தன்மை கொண்ட நார் பொருள் இது. இந்த வேதிப்பொருள்தான் நீரில் வெந்தயத்தை ஊற வைக்கும்போது ஏற்படும் வழுவழுப்பு தன்மைக்குக் காரணம். இது மலச்சிக்கலை நீக்கும்; ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை குறைக்கும்; கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4 ): வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இது. ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்திருந்தால் மட்டுமே, இன்சுலினைச் சுரக்கத் தூண்டி ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவுக்குக் கொண்டுவரும் இதன் சிறப்பான செய லால், நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவாக நமது அஞ்சறைப் பெட்டியில் இடமளித்த முன்னோர் அறிவு வியக்கும்படி உள்ளது.
-விடுதலை,8.8.16