செவ்வாய், 26 நவம்பர், 2019

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

புதர்களிலும் வீணாகக் கிடக் கும் இடங்களிலும் வளரும் செடி தான் கோவைக்காய். இதனை நாம் அன்றாடம் உணவுகளில் அதிகளவு சேர்த் துக் கொண்டால் நம் உட லுக்கு தேவையான ஆரோக் கியத்தை பெற முடியும். இது நம் உடலில் உள்ள பல வகையான நோய்க்கு மருந்தாக அமைகிறது. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்களை  குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

* கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்டநேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.

* தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது, உப்பு தன்மை அதிகமான நீரை, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைப்பது, மதுப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகும். வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

* உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சினை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

* சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவுப்பழக்கங்களாலும் ஏற்படும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.

* கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

* கோவைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சியடையவும், உறுதியாக இருக்கவும்  மற்றும் இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டு மொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

 -  விடுதலை நாளேடு 18.11.19

மருத்துவ குணங்கள் கொண்ட பனங்கற்கண்டு!

வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும், முடியாத பட்சத்தில் குறைக்கவும் என்று சமீபகாலமாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு வழியில்லை சர்க்கரையை தவிர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால், சாதாரண மக்கள் இனிப்புக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது அங்கே அதற்கு மாற்றாய் நம் பாரம்பரிய உணவுப்பொருளான பனங்கற்கண்டு இருக்கிறது என்பதையும் அதே மருத்துவர்களே நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

பனங்கற்கண்டின் சுவை மட்டும்தான் நமக்குத் தெரியும். அதனைப் பற்றிய பயனுள்ள தகவல்கள் தெரியுமா? அதனை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? அவற்றை இங்கே விளக்க வருகிறார் சித்த மருத்துவர் சிவராமன். பனை மரத்தின் பதநீரை தூய்மைப்படுத்தி அதனை காய்ச்சி, பாகு பதத்தில் வடித்து கற்கண்டு வடிவில் தயாரிக்கும்போது கிடைப்பதே பனங்கற்கண்டு. பனங்கற்கண்டில் கார்போஅய்ட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற தாது சத்துக்களும், நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான ஆன்டி ஆக்சிடென்ட்டும் அதிகம் இருக்கின்றன. பனங்கற்கண்டு சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலைத் தரக் கூடியது.

நல்ல செரிமான சக்தியைத் தூண்டும். ரத்தத்தைச் சுத்தம் செய்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது. இதில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. அதிகமான அல்லது குறைவான நாடித்துடிப்பால் பல்வேறு நோய்கள் உடலை பீடிக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகளின் இயக்கத்தைச் சமப்படுத்தி சீராக்கி, உடலை நோயிலிருந்து பாதுகாக்க வல்லது இந்த பனங்கற்கண்டு.

சளி, இருமல், குணமாக தூதுவளையின் 5 இலைகளுடன் மிளகு 10 எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு, பனங்கற்கண்டு 25 கிராமுடன் தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் தூதுவளை, பனங்கற்கண்டு, இடித்த மிளகு இவற்றைப் போட்டு கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிட்டு மிதமான சூட்டில் பருகி வர சளி, இருமல், ஒற்றைத் தலைவலி ஆகியவை குணமாகும். இதனை சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து அய்ந்து நாட்கள் பருக வேண்டும்.

இதேபோல் ரத்த சோகை குணமாக மாதுளம் பழச்சாறு 250 மில்லி, ரோஜா பன்னீர் 25 மில்லி, பனங்கற்கண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் இறக்கி, ஆறிய பின் கண்ணாடிக் குடுவையில் சேகரித்து வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர ஒரு மாதத்திற்குள் ரத்த அணுக்கள் உற்பத்தியாகி, ஹீமோகுளோபின் எண்ணிக்கைக் கூடும். பனங்கற்கண்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தசோகை குறைபாட்டை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பனங்கற்கண்டில் தேவையான நார்ச்சத்து இருப்பதால் குடலின் நொதிகள் சீராக செயல்பட்டு, செரிமான சக்தியும் தூண்டப்பட்டு, குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. இதற்கு வாழைப்பழம் ஒன்று, உலர் திராட்சை 7, பனங்கற்கண்டு 10 கிராம் ஆகிய மூன்றையும் மசித்து, இரவில் படுக்கும் முன் எடுத்துக் கொள்ள மலச்சிக்கல் வராது. இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம் சீராக பனங்கற்கண்டில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதயத் தசைகளை பாதுகாக்க வல்லது. மேலும் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

இதற்கு ஒற்றை அடுக்கு செம்பருத்தி 3, பனங்கற்கண்டு 5 கிராம், வெந்தயம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றுடன் தேவையான அளவு நீரில் இந்த மூன்றையும் போட்டு காய்ச்சி வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, இதயக் கோளாறுகள் சரியாகும். சரும நோய்கள் நீங்க ஒரு டம்ளர் அருகம்புல் சாற்றுடன் தேவைக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, சொறி, சிரங்கு, தேமல், படர் தாமரை முதலான அனைத்து தோல் நோய்களும் தீரும். ஆஸ்துமா, காச நோய்கள் தீர ஆஸ்துமா, காச நோய்களுக்கு பனங்கற்கண்டுடன் சித்தரத்தை வேர் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடிக்க நோய் தீரும்.

கர்ப்பிணிகள் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வரும் போது, கருத்தரிக்கும் பெண்களுக்கு கருவளர்ச்சி ஆரோக்யமாக இருப்பதோடு சுகப்பிரசவமும் உண்டாகும். மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பையும் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளும் பனங்கற்கண்டை குறைவான அளவில் பயன்படுத்த நலம் பயக்கும்.

மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்

* மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.

* வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.

* இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.

* களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

* மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

* கண்பார்வை தெளிவு பெறும்.

* வயிற்று நோய், வயிறுப் பிரச்சினை, வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

* கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

* மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.

* மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

- விடுதலை நாளேடு, 18.11.19

சனி, 7 செப்டம்பர், 2019

மருத்துவம் : நிலவேம்பு



டெங்குக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் நோய்களுக்கும் ‘எபோலா’ என்ற காய்ச்சலைக் குணப்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்படுகின்றது.

அகத்தியர் குண பாடத்திலும் நிலவேம்பின் மருத்துவப் பயன்களை விவரிக்கும் பாடல் ஒன்று உள்ளது.

“வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சூதோடே

காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே

பித்த மயக்கறுக்கும்  பின்புதெளி வைக்கொடுக்கும்

சுத்தநில வேம்பின் தொழில்’’

நிலவேம்பின் மருத்துவக் குணங்களும் பயன்களும்

ஜுரம், வீக்கம், ஜலதோஷம் போன்ற குறைபாடுகளைக் குணமாக்க வல்லது. வாதம் சார்ந்த சுரம், பித்த மயக்கம், நீர்க்கோர்வை போன்ற நோய்களையும் எளிதில் அதிகப் பணச் செலவு இன்றிக் குணப்படுத்த வல்லது நிலவேம்பு. முக்கியமாகப் பலவகை ஜுரங்களுக்கும் சிறந்த மருந்தான நில வேம்பைப் பயன்படுத்தும் முறையை அறியலாம். 15 கிராம் நிலவேம்புடன் கிச்சிலித் தோல் 195 மில்லி கிராம் மற்றும் கொத்துமல்லி 195 மில்லி கிராம் ஆகியவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு சுமார் 1 முதல் 1லு மணி நேரம் ஊற விடவும். பின்னர் அந்நீரை வடிகட்டி உடல் எடைக்கு ஏற்றாற்போல் 15 முதல் 35 மில்லி லிட்டர் வரை தினமும் 2 அல்லது 3 வேளை அருந்தச் செய்யவும். பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா மற்றும் மலேரியாவிற்கு இம்மருந்து சிறந்தது.

நிலவேம்பு நுண்ணுயிரிகளான பாக்டீரியா, வைரஸ் போன்றவைகளை அடியோடு அழிக்க வல்லதாகும். யானைக்கால் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் இதற்கு உண்டு.  சுவாச மண்டலத்தில் சேர்ந்துள்ள கபத்தை  அகற்றும் குணம் நிலவேம்புக்கு உண்டு. ஜலதோஷத்தையும் விரைவில் போக்கும் திறன் இதற்கு உண்டு. இருமல், தொண்டைத் தொற்று (ஜிலீக்ஷீஷீணீt மிஸீயீமீநீtவீஷீஸீ), ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவற்றிற்கும் நிலவேம்புக் கஷாயம் அருமருந்தாகும்.

நில வேம்பில் உள்ள ஆண்ட்ரோ கிராஃபோலைட் புற்று நோயில் ஏற்படும் அபரிமிதச் செல்களின் பெருக்கத்தைத் தடுக்க வல்லது.


வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த

நிலவேம்பின் சாறு எல்லாவிதமான அல்சருக்கும் அருமருந்தாகும். இது குடலில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்தும். ஜீரண ஆற்றலை விரைவுபடுத்தும். நல்ல பசி எடுக்கச் செய்யும்.

பேதியைக் குணமாக்க

நிலவேம்புச் சாறு பேதியை உடனே குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

கல்லீரல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த

கல்லீரல் தொற்று, அழற்சி போன்ற நோய்களிலிருந்து காக்க வல்லது நிலவேம்பு. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கத்திற்கு நிலவேம்புச் சாறு சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கும் நில வேம்பின் சாறைத் தேனுடன் கலந்து 2 முதல் 3 மி.லி வரை கொடுக்கலாம். நில வேம்பில் உள்ள ஆண்ட்ரோ கிராஃபோலைட் புற்று நோயில் ஏற்படும் அபரிமிதச் செல்களின் பெருக்கத்தைத் தடுக்க வல்லது.

நிலவேம்புத் தீ நீரைத் தயார் செய்யும் முறை

உலர்ந்த நிலவேம்பு இலைகள் மற்றும் சமூலம் (பூக்கள், வேர்) ஆகியவற்றைத் தூள் செய்து கொள்ளவும். இத்தூளில் சுமார் 5 _7 கிராம் எடுத்துக் கொண்டு அதன் மீது நன்கு உருண்டு கொதித்து வந்த நீரில் ஒரு கப் (200 மில்லி) விடவும். சுமார் 10 _15 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பிறகு இக்கஷாயத்தைச் சாப்பாட்டிற்கு முன்பு பருகவும்.
- உண்மை இதழ், பிப்ரவரி 16- 28.19
 

திங்கள், 24 ஜூன், 2019

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்



அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்வதே இதய நோய்கள் பெருகுவதற்குக் காரணம்.

கொழுப்புச் சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என் கின்றனர்  ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சரியான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கொழுப்புச் சத்தைக் குறைப்ப தோடு, இதய ஆரோக்கியத்துக்கும் உதவு கிறது.

ஆலிவ் எண்ணெய்


ஆலிவ் எண்ணெய் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு உதவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் வசிக்கும் மக்களிடம் இதய நோய் பிரச்சினைகள் குறைவாக இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

வெங்காயம்


கொழுப்பின் அளவைக் குறைப்பதில், வெங்காயம் முக்கியப் பங்குவகிக்கிறது. வெங்காயத்தில் இருக்கும் குவர்செடின் (Quercetin) என்ற நிறமி, ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகச் செயல்படுகிறது. இது கொழுப்புச்சத்து ரத்தக் குழாய்களை அடைப்பதைத் தடுக்கிறது.

பச்சை வெங்காயத்தைவிட, சமைக்கப் பட்ட உணவில் பயன்படுத்தப்படும் வெங் காயம், ரத்தக் கொழுப்பைக் கட்டுப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயத்தைப் போன்றே பூண்டிலும் ரத்தத்திலிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. வெங்காய மும் பூண்டும் ஆரோக்கியமான  ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும்.

பீன்ஸ்


பீன்ஸ், பட்டாணி, கொண்டைக் கடலை, பருப்பு வகை போன்றவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. ஒரு நாளில் ஒரு முறை, இவற்றில் ஏதாவது ஒன்றை உட்கொள்வது, ஆறு வாரங் களுக்குக் கெட்ட கொழுப்புச்சத்தை 5 சதவீதம் குறைப்பதாக கனடாவின் மருத்துவ இதழ் தெரிவிக்கிறது.

பீன்ஸ், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கொழுப்பைக் கட்டுப் படுத்துவதாகத் தெரிவிக்கப்படு கிறது.

மஞ்சள்


ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு, மஞ்சளும் உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் வீக்கத்தைக் கட்டுப் படுத்தும் கர்குமின் (Curcumin) என்ற வேதிப் பொருள் ரத்தத்தில் இருக்கும் கொழுப் பைக் குறைக்க காரணமாக இருக்கிறது.

பாதாம்


பாதாமில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து  ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும்.

ஆறு வாரங்களுக்கு அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தவர்களுக்கு நல்ல கொழுப்புச் சத்து அதிகரித்திருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

வெண்ணெய்


வெண்ணெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் இருப்பதால், ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கிடைக்க உதவுகிறது.  அளவாக எடுத்து கொண்டால், ஆலிவ் எண்ணெய்யைப் போன்று வெண்ணெய்யும் நல்ல கொழுப் பைப் பெறுவதற்குச் சிறந்த வழி.
- விடுதலை நாளேடு, 24.6.19

வியாழன், 30 மே, 2019

பிடல் காஸ்ட்ரோவும், முருங்கைக் கீரையும்...

2010ஆம் ஆண்டு கியூபாவின் அண்டை நாடான ஹைட்டி தீவில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் நின்றார்கள். அப்போது பிடல் காஸ்ட்ரோ முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்தார். அப்படியிருந்தும் பூகம்பத்தால் பாதித்த மக்களுக்கு உதவ நினைத்தார். மருத்துவர்களையும், தன் னார்வ தொண்டர்களையும் அங்கே அனுப்பிவைத்தார்.


அவர்கள் ஹைட்டி தீவில் பூகம்பத்தால் அதிக மக்கள் இறந்துவிட்டார்கள் என்றும், அதோடு கூடவே காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்கள். பிடல் காஸ்ட்ரோ அப்போது அதிபராக இல்லாத போதும், உயர்மட்ட மருத்துவ குழுவினரை அழைத்துப் பேசினார். காலரா நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? அதற்கு தீர்வு என்ன? என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, பின்லே இன்ஸ்டிடி யூட் மருத்துவ ஆராய்ச்சி மய்ய மருத்துவர் கெம்பா ஹெர்கோ, இந்தியாவிலுள்ள முருங்கை இலைக்கு காலராவை தடுக்கும் எதிர்ப்பு சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது என்று கூறினார்.

உடனே ஹெர்கோ தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை காஸ்ட்ரோ இந்தியா விற்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழு முதலில் வந்த இடம் தமிழ்நாடு. முருங்கை சாகுபடி, அதன் மருத்துவ பயன்கள் போன்ற வற்றை கேட்டறிந்தார்கள். அதன்பின் கேரளா, ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் சென்று மேலும் தகவல்கள் திரட்டினார்கள். ஹைட்டி மக்களுக்கு முருங்கைக் கீரையை இறக்குமதி செய்து கொடுத்தார்கள். கால ராவும் கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து அதன் இலைகளை கீரையாய் செய்து சாப்பிடுங்கள் என்று காஸ்ட்ரோ அறிவுரை கூறினார்.

கியூபா அரசும் தனது மக்களை முருங்கை மரம் வளர்க்கச் சொல்லி அறிவு றுத்தியது. காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான முருங்கை மரங்களை வளர்த் தார். அவற்றை பராமரிக்கும் வேலையை யும் அவரே செய்தார். முருங்கைக்கீரையை தனது உணவில் தினமும் சேர்த்து வந்தார். தனது ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்புக்கு இந்திய முருங்கைக் கீரை காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

தன்னுடைய தோட்டத்தில் மட்டுமல் லாது கியூபா முழுவதுமே முருங்கை மரங்கள் நடப்பட்டு, அதன் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவற்றை மக்கள் உணவாக உட்கொண்டு வருகின்றனர். அதற்கு பிடல் காஸ்ட்ரோ மேற்கொண்ட முயற்சியே காரணம்.

- நன்றி: ஜனசக்தி மே 12-18, 2019

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

புதன், 29 மே, 2019

எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்

சில உணவுகள் ஆரோக்கியமானவை என்று தெரிந்தாலுமே சுவை பிடிக்காமல் தவிர்ப்போம். அப்படித் தவிர்க்கும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் சில உணவுகளைப் பார்ப்போமா?!

ஓட்ஸ்


இன்றைய எந்திர உலகில் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது ஓட்ஸ். தயாரிப்பதும் சுலபம். இதில் வைட்டமின் பி6 மற்றும் பி12 சத்துகள் நிறைய உள்ளன. மூட்டுகளின் வீக்கத்துக்குக் காரணமான, ரத்தத்திலுள்ள ஹோமோ சிஸ்டைன் என்கிற அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்க வல்லவை. நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடலில் சேரும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. ஓட்ஸைத் தேர்ந்தெடுப் பதில் கவனம் தேவை. ரீஃபைண்டு ஓட்ஸில் மேற்சொன்ன எந்தச் சத்துகளும் இருக்காது என்பதால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி பிரதானமாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதற்கும் வைட்டமின் சி அவசியம். தவிர இவை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையையும் தவிர்க்கக் கூடியவை. வீக்கத்தைக் குறைக்கக் கூடியவை.

உணவுகளில் அக்கறை செலுத்தும் அதே நேரம், உடற் பயிற்சியிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கு இணையாக உடற்பயிற்சிகளின் பங்கும் உள்ளது. நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல், மெது ஓட்டம் என ஏதேனும் ஒரு பயிற்சியை மிதமான வேகத்தில் தினமும் சிறிது நேரம் செய்வது நல்லது.

புரோக்கோலி


க்ரூசிஃபெரஸ் காய்கறி வகையைச் சேர்ந்தது இது. க்ரூசிஃபெரஸ் காய்களில் சல்போராபேன் என்கிற கலவை இருக்கும். இவை மூட்டுகளின் குறுத்தெலும்புகளின் ஆரோக் கியம் காப்பவை. மூட்டுப் பிரச்சினைகளுக்குக் காரணமான நொதிகளைத் தடுத்து, அதன் விளைவாக வீக்கத்தையும், வலியையும் குறைக்கும் குணம் கொண்டவை. தவிர புரோக்கோலியில் வைட்டமின் ஏ முதல் கே வரை அனைத்தும் உள்ளன. மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் உள்ளன. அதிகளவிலான கால்சியமும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை.

மீன்கள்


மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. முதுமை காரணமாக எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தைத் தவிர்க்கவும், மூட்டுப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, உயவுத்தன்மை குறைவதையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்  தவிர்க்கும்.

-  விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

மருத்துவம் : முள்ளங்கியென்னும் முக்கிய உணவு


உணவில் சிறந்தது முள்ளங்கி. வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் விளைச்சலாகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கியில் ஒரு வித காரத்தன்மையும் நெடியும் இருக்கும். இத்தன்மை கந்தகச்சத்தால் உண்டாகிறது. இந்த கந்தக்க கூறுகளே அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாகின்றன. முள்ளங்கியில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை நீக்கவல்லது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி சிறந்த மருந்தாகும். இதில் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும் உடல் வலிகளை நீக்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது. முள்ளங்கியில் உள்ள நீர் சத்தானது உடலுக்கு குளிர்ச்சியையும், வெப்பத்தை தாங்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக் கட்டையும், மூக்கு தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்றுநோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும். முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும்.

நமது உடலில் முக்கிய பங்காற்றும் கல்லீரலுக்கு முள்ளங்கி சிறந்த நண்பன். இதிலுள்ள கந்தக சத்துக்கள் பித்த நீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால், கொழுப்பு மற்றும் மாவு சத்துகள் நன்றாக சீரனமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது.

இரத்ததில் கெட்ட கொழுப்புகள் சேர்வதும் தடுக்கப்படும் இரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும். ஜீரண தொந்தரவு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரக செயல்பாட்டுக்கு முள்ளங்கி அவசியமானதொன்று. தினமும் 50 மி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதிலுள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும் அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போக்கும். இதில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் உண்டாகும் இரத்த அழுத்தம் நீங்கும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை ‘சாலட்’ செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க வேண்டியவர்கள் இதனை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். சருமத்தை பொலிவாக்கி இளமையை பாதுகாக்கவும் செய்கிறது. எளிதில் வாங்கக்கூடிய இக்காயை வெயிலில் உழைக்கும் மக்கள் அதிகம் சாப்பிட்டு கோடைக்காலத்தில் வரும் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் சிவப்பு முள்ளங்கியிலும் மேற்கண்ட அனைத்துச் சத்துகளும் இருக்கின்றன.

- உண்மை இதழ், 1-15.5.19

மருத்துவம் : செவ்வாழை


செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதுடன் ஆல்கலைன் நேச்சர் (Alkaline Nature) எனப்படும் காரத்தன்மை கொண்ட பழம் இவ்வாழைப் பழம். சிவப்பு நிறத்தில் இருப்பதால் ஆன்தோ சயானின்  (Antho Cyanin) என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்  (Anti Oxidant) நிறைந்தது. எனவே  ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழமாக செவ்வாழைப் பழம் விளங்குகிறது. இப்பழத்தில் 4 சதவீதம் நார்ச்சத்து உள்ளதுடன், வைட்டமின் சி சத்தும் உள்ளது.

செவ்வாழை சர்க்கரை சத்தை மெதுவாக வெளியேற்றும் தன்மை கொண்டதால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் பாதுகாக்கிறது. இப்பழத்தில் உள்ள பீடா கெரெட்டின்  (Beta Carotene) வைட்டமின் பி-6 மற்றும் வைட்டமின் டி ஆகியவை இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்திக்கும், புரதச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.  இப்பழத்தில் 11 தாது உப்புகளும், 6 வைட்டமின் சத்துக்களும் அதிக நார்ச்சத்தும் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்தும் அதிகம் உள்ளதால் இப்பழத்தை சாப்பிட்ட உடன் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

மருத்துவ குணங்கள்

செவ்வாழையில் வைட்டமின் சி சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் பிரி ராடிகல்ஸ்  (Free Radicals) என்னும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக்) நோயையும் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்திற்கும் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி தேவையான 16 சதவிகிதம் உள்ளது.

இப்பழத்தில் கொழுப்பு சத்தும் கிடையாது. எனவே உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது. டிரிப்டோபன் (Tryptophan) என்னும் அமினோ அமிலத்தை செரோடோனின்  (Serotonin) ஆக மாற்றுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டியுடன் செவ்வாழைப் பழத்தையும் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.

பழத்தில் உள்ள ஆன்டாசிட் (Antacid) அடிக்கடி ஏற்படும் நெஞ்சு எரிச்சலைக் குணப்படுத்துகிறது. செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் எளிமையாகவும், இயற்கையாவும் மலச்சிக்கலையும் மூலநோயையும் தடுக்க முடியும். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட்டால்தான் அதன் பலன் கிடைக்கும். தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் தடுத்து இளமைத் தோற்றத்தை வழங்குகிறது. இப்பழத்தில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளதால் தோல் காய்ந்து போவதையும், தோல் உரிவதையும் தடுத்து விடுகிறது.

செவ்வாழைப்பழம் வயிற்றில் அமில அளவைக் குறைத்து விடுவதால் வயிற்று எரிச்சலையும் குறைத்து விடுகிறது. வயிற்றின் உட்புறச் சுவரின் செல்கள் நன்றாக வளர்வதற்கு உதவுவதால் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தடுத்துவிடுகிறது. பழத்தில் உள்ள புரோட்டியேஸ்  (Protease) எதிர்ப்பு சக்தியின் காரணத்தால் வயிற்றில் புண்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது.

இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் கண் பார்வைக்கு சிறந்தது. இப்பழத்தில் உள்ள பீடா கெரோட்டீன் சத்து வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த வைட்டமின் ஏஇன் சத்து கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வைக்கும் சிறந்தது.

குறிப்பு: சிறுநீரக நோயாளிகளும் கிட்னி பெயிலியர் (Kidney Failure) எனப்படும் சிறுநீரகம் சரியாக செயல்படாத நோயாளிகளும், பொட்டாசியம் கலந்த உணவை சாப்பிடக் கூடாது. எனவே இவ்வகை நோயாளிகள் செவ்வாழைப் பழத்தை சாப்பிடவே கூடாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

- உண்மை இதழ், 16-31.5.19

செவ்வாய், 5 மார்ச், 2019

உடலை பாதுகாக்கும் பருப்புகள்



உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதவை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சைப் பயறு: புரோட்டீன், கால்சியம், பொட் டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங் களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக் கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்ட மின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கி யுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல் பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டைப் பயறு: தட்டைப் பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக முள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

- விடுதலை நாளேடு, 4.3.19

வெள்ளி, 1 மார்ச், 2019

கற்பூரவல்லி கைகண்ட மருந்து!



மனதுக்கு உற்சாகத்தை அளித்து, வாசனையின் மூலமே பாதி நோய்களை விரட்டும் பேராற்றல்மிக்க மூலிகை இது.

இதிலுள்ள வேதிப்பொருட்கள்


பிளக்ட்ராந்தஸ் அம்போய்னிகஸ் (Plectranthus amboinicus) எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்பூர வள்ளி, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. சதைப்பற்றுள்ள இதன் இலைகளில் வாசனைக்குக் குறைவிருக்காது. இலையின் விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். மெல்லிய ரோம வளரிகள் தாவரம் முழுவதும் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. நறுமண எண்ணெய்கள் (Volatile oils), கார்வாக்ரால் (Carvacrol), காரீன்(Carene), கொமாரிக் அமிலம் (Coumaric acid) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டது.

தீர்க்கும் நோய்கள்


மழை, குளிர் காலத்தில் அனைவரது சமையல் அறைகளிலும் கோழையகற்றி செய்கையுடைய கற்பூர வள்ளியின் மண-மிருந்தால், நுரையீரல் பாதை தொடர்பான நோய்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது. வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி போல, இதன் இலைகளால் செய்யப்படும் கற்பூர வள்ளி பஜ்ஜி, மழைக்காலத்திற்கு உகந்தது!

இலையை அவியல் செய்து சாறு பிழிந்து அல்லது இலைச்சாற்றைச் சட்டியிலிட்டு சுண்டச் செய்து, கப நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். அசைவ உணவு வகைகளைச் சமைக்கும்போது, இதன் இலைகளைச் சேர்த்துக் கொள்ள, செரிமானம் துரிதப்படுவதுடன், உணவின் சுவையும் மணமும் கூடும் என்பது சமையல் நுணுக்கம். கற்பூர வள்ளியோடு, தேங்காய், பருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து சட்னியாகச் செய்து சாப்பிடலாம்.

இதன் வாலடைல் எண்ணெய்யில் உள்ள பி-சைமீன்(p-cymene),  தைமால்(thymol) ஆகிய வேதிப் பொருட்கள், நோய்க் கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. இதிலிருக்கும் வேதிப் பொருட்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். அதிகக் கதிரியக்கத்தால் டி.என்.ஏ.வுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் திறன் கொண்டது இது என்று கூறப்படுகிறது.

இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கு, காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மை இருக்கிறது. இதில் உள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு, பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் வன்மை இருப்பதால், பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

கற்பூர வள்ளியின் கழறிலை நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே எனும் தேரையர் காப்பியப் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது. கற்பூர வள்ளி இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

தைலம்


கற்பூர வள்ளி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்க்கலாம்.

பானம்


இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும் மாலையிலும் கற்பூர வள்ளித் தேநீராகப் பருக, தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும் போதே, சிறிதளவு இலையை மென்று சாப்பிட, தொண்டையில் கட்டிய கபம் இளகும். உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க, கற்பூர வள்ளிச் சாற்றை, நீரில் கலந்து பருகலாம்.

தண்ணீரில் கற்பூர வள்ளி இலைகளைச் சிதைத்துப் போட்டு, ஆவி பிடிக்கலாம். குழந்தைகளுக்குச் சளி, இருமல் இருக்கும்போது கற்பூர வள்ளி இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவலாம். கொசுக்கள் வராமல் தடுக்கும் மூலிகைகளுள் கற்பூர வள்ளியும் ஒன்று. ஸீ

-  உண்மை இதழ், 16-30.11.18