திங்கள், 30 ஜனவரி, 2017

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...




வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு  ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு  நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப்  பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு  பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள்  உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது  இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து  நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும்  வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து  சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச்  சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத்  தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல்  தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம்  உதவுகிறது.

உடல் வெப்பக் கடுப்பு அகல...

பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க  உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

சாதாரண தலைவலிக்கு

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு

வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு...

பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு  வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும்  வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது.  வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை  அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில்  நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க

அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி  உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க

குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச்  சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
-விடுதலை,22.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக