புதன், 9 டிசம்பர், 2015

எள்-ரத்த விருத்திக்கு உதவும் எள்


இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு அதிக வரவேற்பு.
வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்.
பைட்டோஸ்டீரால்  எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன்,செஸமொலின் ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க  விரும்புபவர்களுக்கு  மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.
எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.
மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக் கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
தயமின் சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும்.
தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள்.   துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். நல்ல கொழுப்பும் அதிகரிக்கும். பக்கவாதம் வருவத வற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.
நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்சினையைத் தடுக்கும்.
-விடுதலை,9.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக