ஞாயிறு, 5 ஜூலை, 2015

இயற்கை நமக்கு தரும் சத்துக்கள்


அன்னாசி பழம், பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரைகளில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை அளவோடு உட்கொண்டால் மாலைக்கண் நோய் தீரும். சருமம் பொலிவு பெறும்.
வைட்டமின் பி- வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டு தக்காளி, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, கடலை, மாதுளை போன்றவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அளவோடு உண்டால், நமது உடல் வலிமைக்கும் நரம்புகள் ஊட்டத்துக்குள் வலு சேர்க்கும். மேலும் வயிற்றுப் புண், வாய்ப் புண், ரத்தசோகை, கை-கால் செயலிழத்தலை விரைவில் குணமாக்கும்.
வைட்டமின் சி- எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டு தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு, முட்டைகோஸ், காலிபிளவர், வெள்ளை முள்ளங்கி மற்றும் புளிப்பு சுவை உடைய காய்கள் மற்றும் கீரைகளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கும் அதிகளவில் உதவுகிறது.
மேலும் சளி பிடித்தல், வயிற்றுப் புண் (அல்சர்), குடல் புண் உள்ளவர்கள் இதுபோன்ற ரத்த சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.
வைட்டமின் டி- முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலுக்கு ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும். இந்த சத்து குறைவதால்தான் நமக்கு தோல் வியாதிகள் வருகின்றன.
தேங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைவாகவும் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் இ- முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, தேங்காய், பேரீச்சம்பழம், பதநீர் போன்றவற்றில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம்.
இவை நமது உடல் ஆரோக்கியத்துக்கும், உயிர் சத்தான விந்துவையும், கரு தரித்தலுக்கான சினை முட்டைகளையும் அதிகரிக்க இந்த சத்து மிகவும் முக்கியம். வயதுக்கு வராத பெண்கள், கருத்தரிக்காத பெண்கள் மற்றும் ஆண் மலடுகளுக்கு இந்த சத்து மிக அவசியம்.
வைட்டமின் கே- வாழைப் பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத் தண்டு, நெல்லிக்காய், கொய்யாப் பிஞ்சு, மொச்சை, புளிச்ச கீரை போன்றவற்றில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் காணப்படும்.  நம் உடலில் இந்த சத்துக்கள் குறைந்தால் ரத்தம் நீர்த்து போய், ரத்த ஒழுக்கு ஏற்படும். இந்த சத்து ரத்தம் உறைதலுக்கு மிக அவசியம்.
இரும்பு சத்து- முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, அவரை, வாழைப்பூ, கத்திரி பிஞ்சு, நாட்டு தக்காளி, வெள்ளரி, வெண்டை மற்றும் பாகற்காயில் இரும்பு சத்துகள் அதிகம். இந்த சத்து நம் உடலில் குறைவதால் ரத்தம் கெடுவதுடன் தோல் வியாதி ஏற்படுகிறது.
அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் ரத்த சோகை ஏற்படும். ஆனால், அதுவே அளவுக்கு மீறியிருந்தால் வயிற்றுக் கோளாறு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.
மாவு மற்றும் சர்க்கரை சத்து- நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை, வெல்லம், கிழங்கு வகைகள், வெங்காயம், அரிசி, கோதுமை, பால், பருப்பு மற்றும் தானிய வகைகளில் இந்த 2 சத்துகளும் அதிகம் உள்ளன. நமது உடலில் சேரும் கொழுப்பு சத்துகளை கரைந்து போகாமல் தடுப்பதுடன், விரதம் இருப்பவர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களை காப்பதும் இந்த 2 சத்துகளும்தான்.
புரத சத்து- சோயா மொச்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, கொட்டை பருப்பு, பால், பாலாடை, மீன், முட்டை போன்றவற்றில் புரத சத்து அதிகம். இவை உணவை ஜீரணிக்க உதவுவதுடன், ஜீரண நீர் வளர்ச்சிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
இவை குறைவதால் தசைகள் இளைத்து போவதுடன், சத்து குறைவு காரணமாக உடலில் வீக்கம் ஏற்பட்டு ஊதி பெரிதாகிறது.
கொழுப்பு சத்து- வெண்ணெய், மிருக கொழுப்புகள், தேங்காய், எண்ணெய், கடலை எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள எண்ணெய் போன்றவற்றில் கொழுப்பு சத்துக்கள் அதிகம். இந்த சத்துக்கள் நீரில் கரையாமலும், எண்ணெய் போன்ற பிசுக்களினால் ஆன தனித்தன்மை பெற்றது.
சுண்ணாம்புச் சத்து- நம் உடலின் தாதுப் பொருட்களில் மிக முக்கியமான சத்து சுண்ணாம்பு சத்தாகும். இவை முருங்கை கீரை, ராகி, கோதுமை, நண்டு, ஆட்டு இறைச்சி, பீட்ரூட், வெங்காயம், வெண்டைக்காய் மற்றும் கேரட் போன்ற வற்றில் மிகுதியாக இருக்கும். நமது உடலில் எலும்புகள், பற்கள், நரம்பு மற்றும் தசைகளின் சரியான இயக்கத்துக்கும், ரத்தம் உறையவும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவைப்படுகிறது.
சாம்பல் சத்து- முருங்கை, ராகி, கோதுமை, நண்டு, வெங்காயம் மற்றும் வெண்டைக் காயில் சாம்பல் சத்து அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள ரத்தத்தின் அமில, காரத்தன்மையைக் கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். எலும்புகளுடன் சுண்ணாம்பு சத்து சேருவதில் சாம்பல் சத்து பெரும்பங்கு வகிக்கிறது.
உப்பு சத்து- நம் உடலில் சேரும் நீர் சத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பங்கு வகிப்பது உப்புதான். ஆனால், இவற்றை நாம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நம் உடலில் அதிகமானால், கழுத்துக்கு முன்புற வீக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்படும்.

-விடுதலை,15.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக