புதன், 8 மார்ச், 2017

ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் கற்றாழை ஜூஸ்



அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு நோய் அதற்கான மருத்துவம் என்று நோயினை முன்வைத்து எளிய முறையிலே நாம் இல்லத்தில் இருந்தபடி செய்து உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக  பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், உயிருக்கு ஆபத்து நேரிட செய்யும் பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து பார்க்கலாம். பெரும்பாடு என்ற நோயானது தைராய்டு சுரப்பி, கருப்பையிலே நார்கட்டிகள், கருப்பை சுவர்களில் சிறு சிறு கொப்பளங்கள், கருப்பையிலே நீர் கட்டிகள், ஹார்மோன் கோளாறுகளால் சுரப்பிகளில் ஏற்படுகின்ற மாற்றம், கரு முட்டைகள் சரியான முறையில் உற்பத்தியாகி வெளியேறாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்நோய்க்கான வெளிப்பாடு அதிக ரத்தப்போக்கு, உடல் சோர்வு, இடுப்பு மற்றும் அடிவயிற்று வலியாகும். நாவல் பட்டை, கற்றாழை, முருங்கைப்பூ உள்ளிட்டவைகள் பயன்படுத்தி பெரும்பாடு நோய்க்கான மருந்து குறித்து பார்க்கலாம். நாவல் பட்டையை பயன்படுத்தி அதிக ரத்தப்போக்கை தடுக்கும் பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: மோர், சந்தனப்பொடி, நாவல் மரப்பட்டை ஜூஸ். 30 மி.லி மோருடன் சம அளவு நாவல் பட்டை சாறு மற்றும் சந்தனப்பொடி கலந்து குடிக்கலாம். 

இதனை மாதவிடாயின் போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அருந்துவதால் அதிக ரத்தப்போக்கு விரைவில் கட்டுப்படுத்தப்படும். நாவல் மரப்பட்டையை பசுமையாகவோ அல்லது மருந்து கடைகளில் கிடைக்கும் நாவல் பட்டை சூரணத்தையோ இதில் பயன்படுத்தலாம். இதனால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. வாழைப்பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து: தேவையான பொருட்கள்: ரஸ்தாலி வாழைப்பூ இதழ்(அரைத்து சாறு எடுக்கவும்), பனங்கற்கண்டு மற்றும் பால். 50 மி.லி வாழைப்பூ சாறுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து அருந்தலாம். அல்லது வாழைப்பூ சாறுடன் மோர், சிறிது உப்பு சேர்த்து எடுத்து கொள்ளலாம். குமரி என்று அழைக்கப்படும் வாழைப்பூவில் துவர்ப்பு சுவை உள்ளது. இந்த துவர்ப்பு சுவை ரத்தத்தை கட்டுப்படுத்தும் ஒரு அருமருந்தாகும். இது ரத்தத்தை உடனடியாக உறைய செய்கிறது. முருங்கை பூவினை பயன்படுத்தி பெரும்பாடு, அதிகப்படியான வலியினை போக்கும் மருந்து தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ, காய்ச்சிய பால், பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் முருங்கைப்பூ விழுதுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

பின்னர் அதனை வடிக்கட்டி பாலுடன் சேர்த்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை அருந்தி வருவதால், அதிகப்படியான குருதி போக்கு சரியாவதுடன், உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். முருங்கைப்பூ, நோய் வாராது தடுக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தை உறைய செய்யும் தன்மை, கருப்பைக்கு பலம் தருவது, ஆண் மலட்டு தன்மையை போக்கும் தன்மையும் முருங்கைப்பூவிற்கு உண்டு. இந்த பானத்தை அருந்துவதன் மூலம் நீர்த்த தன்மையுடன் இருக்கின்ற குருதி கட்டுப்படும். அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் சோற்றுக்கற்றாழை: தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ, சோற்றுக்கற்றாழை ஜெல்(7 முறை நீரில் அலசி கசப்பினை போக்கவும்), மோர். இரண்டு ஸ்பூன் சோற்றுக்கற்றாழை பசை, முருங்கைப்பூ விழுது மற்றும் மோர் சேர்த்து கலந்து குடித்து வர அதிக ரத்தப்போக்கு கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த பானத்தை அருந்துவதால், பெரும்பாடு, மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உடல் சோர்வு, அடிவயிற்று வலி, இடுப்பு வலி ஆகியன நீங்குவதோடு, உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது.

- தமிழ் முரசு நாளேடு,8.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக