புதன், 22 ஆகஸ்ட், 2018

புற்றுநோயை ஒழிக்கும் தேயிலை!

புற்றுநோய் ஒழிப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் முடிவுகளை வெளியிட்டு வருவது புற்றுநோய் அச்சத்தில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவைப்பதாகவே இருக்கிறது.

அந்த வகையில், தேயிலையை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு இந்த நல்ல செய்தியினை அளித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தேயிலையில் உள்ள நானோ துகள்கள் மற்றும் சில வேதிப் பெருட்களின் சேர்க்கையின் மூலம் குவாண்டம் துகள்களை உருவாக்கி அதன்மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை 80% அளவுக்கு அழிக்க முடியும் என்று இந்தியா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.

குவாண்டம் துகள்களைக் கொண்டு நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும். இந்தத் துகள்களை செயற்கையாக உருவாக்க பொருளாதாரரீதியாக அதிக செலவு ஆகும். அதேநேரத்தில் அதில் பக்க விளைவுகளும் அதிகம். இந்த நிலையில் தேயிலையில் உள்ள இயற்கையான நானோ துகள்களில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து இயற்கையான முறையில் குவாண்டம்  துகள்களை உருவாக்க முடியும் என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இதன் செலவும் மிகக் குறைவு என்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஸ்வான்சி பல்கலைக்கழக விஞ்ஞானி சுதாகர் பிச்சைமுத்து

- விடுதலை நாளேடு, 20.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக